தமிழகம் முழுவதும் புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்யப்பட வேண்டும். ஏன் செய்யப்பட வேண்டும்?

வருவாய் துறை நில ஆவணங்களில் உள்ள பல்வேறு குளறுபடிகளால் பொதுமக்கள் பெருமளவில் அவதிபட்டு கொண்டு இருக்கின்றனர்.
1985 களில் நடந்த நிலவரிதிட்ட சர்வேயின் போது பூர்வீக சொத்துக்களில் சில பங்காளிகள் பெயர் மட்டும் கணக்கில் ஏறி இருக்கும் மீதி பங்காளிகள் பெயர் ஏறி இருக்காது. பட்டா தன் பெயருக்கு வந்த பங்காளி , பட்டா கணக்கில பெயர் ஏறாத பங்காளிக்கு இடத்தை பிரித்து ஒப்படைக்காமல் வேறு நபருக்கு கிரயம் கொடுக்கும் பொழுது பல சண்டை, சச்சரவுகள், பெரியமனுசன்கள், நீதிமன்றம், காவல் நிலையை பஞ்சாயத்துக்களில் காலத்தையும், பணத்தையும் உறவுகளையும் இழந்து கொண்டு இருக்கின்றனர்.
நிலவரிதிட்ட சர்வே செய்யப்பட்ட கணக்கில் தனியார் ஒருவர் கிரயம் வாங்கி கிரைய பத்திரம் (பழையசர்வே எண் இருக்கிற)வைத்து இருக்கிறஅச்சொத்து புறம்போக்கு என தவறுதலாக வகைப்படுத்தப்பட்டால், பாதிக்கபட்டமக்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், கோட்டாட்சியர், தாசில்தார் நடையாய் நடக்கின்றனர்.
புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டது செல்லாது என வருவாய்துறையினரிம் நிருப்பிக்க ,கம்யூட்டர் E.C, மேனுவல் EC ,பழைய பத்திரங்கள் நகல் எடுத்தல், SLR நகல் எடுத்தல் தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், ஆவண காப்பகங்களில், ஆவணங்களை தேடுவதற்கு, தங்களுடைய பணத்தையும் நேரத்தையும் இழக்கின்றனர்.
பாட்டன் பெயரில் இருக்கின்ற பட்டாவை பல ஆண்டுகளாக வாரிசுகள் பெயர் மாற்றாமலேயே இருந்து விட்டதால் இப்பொழுது மாற்ற வேண்டும் என்று பேரன்மார்கள் வட்டாசியர் அலுவலகம் சென்றால் தாத்தாவின் இறப்பு சான்று, வாரிசு சான்று, வாங்க வேண்டி இருக்கிறது. இறப்பு தேதியை தேட சுடுகாட்டு ஆவணம், தாலுகா, நகராட்சி, பத்திரபதிவு அலுவலகங்களில் தேடுகூலி கொடுத்து தேடியும் தேதி கிடைக்காவிட்டால் நீதிமன்றம் அணுகி பரிகாரம் பெற வேண்டும். நீதிமன்றம் சென்றால், வக்கீல் ஸ்ரைக், நீதிபதிகள் பற்றாகுறைன்னு நீதிதுறை வருவாய்துறை விட பிரச்சனைகள் நிறைந்ததாய் இருக்கிறது.
இப்பொழுது வேறு இந்த மாதிரி வாரிசு சான்று, இறப்புசான்றுக்கு கோட்டாட்சியருக்கு நீதிமன்றத்தில் இருந்து திருப்பபடுகிறது.
இதனால் பட்டா பெயர் மாற்றமே செய்ய வேண்டாம் என்று விட்டு செல்கின்ற பேரன்மார்கள் அதிகம்.
இந்த வேலைகளுக்கு கோர்ட்டுக்கு முத்திரைத்தாள் கட்டணம்,முத்திரை வில்லை கட்டணம், வழக்கறிஞர் கட்டணம் என்று கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை எல்லாம் செலவழித்து மனநிம்மதியை பேரன்மார்கள் இழந்து விடுகிறார்கள்.
மேலும்
விவசாய நிலங்களில் தற்போது பாடுபடுவரின் பெயர் பட்டாவில் மேற்கண்ட சிக்கல்களால் ஏறாமல் இருப்பதால் அவருக்கு கிடைக்க வேண்டிய விவசாய மானியங்கள், கடன்கள், நிதிஉதவிகள், காப்பீடு பெற முடியாமல் தவிர்க்கின்றனர் அலைகிழிக்கபடுகின்றனர்.
நிலவரிதிட்ட காலத்தில் செய்யப்பட்ட சர்வே ஆவணங்களில் இருக்கும் பட்டாதாரர்கள், தங்களுடைய பெயர் மாற்றம் செய்யமாலேயே இறந்துவிட்டார்கள். இப்பொழுது சொத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள், அவ்வாரிசுகளுக்கு பல வாரிசுகள் என சொத்துரிமை பல பங்குகளாய் ஆகிவிட்டது. ஆனால் யாருக்கும் பத்திரங்கள் இல்லை. செட்டில்மென்ட், தானம், விடுதலை பத்திரங்கள் மூலம் பத்திரம் உருவாக்கலாம் என்று நினைத்தாலும் ஒருவர் பங்கை இன்னொருவர் அடையலாம் என்று நினைத்தாலும், பத்திரப்பதிவு துறையின் வழிகாட்டி மதிப்பு அதிகமானது போன்ற குளறுபடிகளால் யார் செலவு செய்வது என்று செலவுக்கு பயந்து பட்டா பெயர்மாற்றம் செய்யும் வேலையை கிடப்பிலேயே போட்டுவிடுகின்றனர்.
மகள் திருமணம், மகன் படிப்பு போன்ற நல்ல காரியங்களுக்கு சொத்தை விற்கலாம் என்று நினைத்தால் இவ்வளவு ஆவண குளறுபடிகள் சரி செய்தால் தான் கிரையம் என்றால் இதற்கு ஆகும் கால விரயத்தை நினைத்து சொத்தை விற்கவும் முடியாமல், மகன்,மகள் நெருக்கடிகளால் சொத்தை வைத்து இருக்கவும் முடியாமல் விழி பதுங்கி நிற்கின்றனர்.
நில அளவுகளில் துல்லியமின்மை, வேலி தகராறு, நில ஆக்கிரமிப்பு தகராறு,எல்லை பிரச்சினை, என்றால் அரசு சர்வேயர் வந்து இரண்டு தரப்புக்கும் வந்து அளந்து தர வேண்டும். சர்வேயரை பிரச்சனைக்குரிய ஸ்தலத்திற்கு வரவைப்பதற்கே, பல நடைகள், பல தொலைப்பேசி அழைப்புகள், அதன் பின் தொடர் ( FOLLOWUP) களுக்கு பின்பு வருகிறார்கள். அதனால் ஏற்படுகின்ற கால விரயம், அலைகழிப்புகள், வெறுத்து போக வைக்கும் மன நிலைக்கு மக்கள் வந்து விடுக்கின்றனர்.
பட்டாவில் இருப்பது பத்திரத்தில் இல்லை, பத்திரத்தில் இருப்பது FMBயில் இல்லை, இவை மூன்றிலுமே இருப்பது களத்தில் இல்லை! இப்படித்தான் சர்வேக்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
UDR, கிராம நத்தம், நகர சர்வேக்களின் பட்டா பெயர் மாற்றம், செய்ய நினைக்கும் நடுத்தர மக்கள் தினமும் வேலைக்கு போவதால் இதற்கென்று ஒரு ஆளை சம்பளதிற்கோ அல்லது தரகிற்கோ உதவி கோர வேண்டி இருக்கிறது. VAO, RI DTபோன்ற அதிகாரிகளை.அதிக பின் தொடரல்களை செய்ய வேண்டி இருக்கிறது.
அதிக காத்திருத்தல் செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கும் மக்களின்கையிருப்பும், காலமும் வீணாக்கப்படுகிறது. ,
மேற்சொன்ன சிக்கல்களுகக்கு தீர்வு வேண்டி அரசு அதிகாரிகளிடம் சென்றால், காலதாமதம் , அலைகிழிப்பு , போன்றவற்றவோடு கையூட்டு இலஞ்சமும், , பேரமும் கொடுக்காமல் வேலைகள் முடிவதில்லை.
சாதாரண மாத சம்பளர்கள்,விவசாயிகள், பெரும் பணம் இதில் இழக்கிறார்கள். சமீபத்தில் சென்னை – OMR துரைப்பாக்கத்தில் VAO விடம் பட்டா பெயர் மாற்றத்திற்கு கையூட்டு தொகையை கேள்விபட்டதுமே HEART ATTACK வந்து இறந்து போனார் அந்த மாத சம்பளக்காரர்.அந்த அளவுக்கு அனைவருமே வாங்கி வாங்கி பழகிவிட்டனர்.
தமிழகம் முழுவதும் மீண்டும் தூய்மையாக சர்வே செய்யமால் வருவாய் துறை ஆவணங்களை கம்ப்யூட்டரில் இருந்து ஆன்லைக்கு மாற்றுவது அடுத்த தலைமுறையினரை பெருமளவு பாதிக்கும்:
தமிழகம் முழுவதும் நிலவரிதிட்ட சர்வே 1985 களில், நஞ்சை, புஞ்சை மானவாரி நிலங்களில் நடந்தது. 1995 களில் கிராம நத்தங்களில் நடந்தது. அதன்பிறகு இப்பொழுது 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் தற்போதைய நிலையில் நிலத்தின் மீது பல்வேறு ஆவண மாறுதல்கள் நடந்து இருக்கிறது.
அதற்கேற்றவாரும் தற்போதைய காலசூழலுக்கு ஏற்றவாறு நில ஆவணங்கள் இல்லை. பழைய நிலவரிதிட்ட சர்வேகளில் பல்வேறு குளறுபடிகளும் இன்னும் முழுமைப்படுத்தபடாத சர்வேக்களும் இருப்பதால் பலவிதமான கஷ்டங்களுக்கு மக்களும், அதிக வேலை பளுவை சுமக்கும் அரசு எந்திரமும் அதன் ஊழியர்களும் அவதிபடுகிறார்கள்.
நிலவரிதிட்ட சர்வே செய்யப்பட்டதில் இருக்கும், பெயர் பிழைகள், அளவு பிழைகள் சர்வே எண் பிழைகள் ஆகியவற்றை திருத்தம் செய்யவும், விடுபட்ட உரிமையாளர்கள் வாரிசுதாரர்கள் பெயரை சேர்க்க, மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆண்டுதோறும், மனுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. அவர்களும் RDO நீதிமன்றங்களில் விசாரணை நடத்தி சரி செய்து கொண்டே இருந்கின்றனர்.
UDR ஆவணங்கள் திருத்தங்கள் இல்லாத ஆவணங்கள் என்றோ, அனைத்து திருத்தங்களும் முடிந்து விட்டது என்றோ இப்பொ ழுதுவரை யாரும் சொல்லமுடியாது.
கிராம நத்தம் பகுதிகளில் நடந்த நத்தம் நிலவரி திட்டம் சர்வேக்களில் நத்தம் தோராய பட்டா நடைமுறையும் நத்தம் துய பட்டா நடைமுறையும் என இரண்டு நடைமுறைகள் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் 1995ம் ஆண்டு ஆரம்பித்த நத்தம் சர்வே 2018 ஆகியும், இரண்டாவது நடைமுறையான தூய பட்டாவுக்கே இன்னும் பல கிராமங்கள் வரவில்லை.
கிராம நத்த சர்வேயிலும், பல அளவு திருத்தங்கள், பெயர் திருத்தங்கள், நத்தத்தில் பொதுவழி, பொது இட சிக்கல்கள், தனியார் புறம்போக்கு என வகைப்பாடுகளில் குளறுபடிகள் என பல இருக்கின்றன. மேற்படி சிக்கல்களை சரி செய்வதற்கு மக்கள் அரசு எந்திரத்துடன் அல்லல் படுகின்றனர்.
UDR ஆவணங்களாவது கணினிமயபடுத்தப்பட்டு விட்டது. ஆனால் கிராம நத்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும், கணினிமயப்படுத்தாமலேயே இருக்கின்றன. இதேபோல் நகரநில அளவைகளும், பெருமளவில் கணினிமயப்படுத்தாமலேயே இருக்கிறோம். உலகமே கம்ப்யூட்டர் to ஆன்லைன் சென்ற பிறகும் நம்முடைய நில ஆவணங்கள் கம்ப்யூட்டருக்கே போகாமல் இருப்பது நம்முடைய பின்னோக்கிய இருப்பையே காட்டுகிறது.
அரசு புறம்போக்கு நிலங்களை அனுபவத்தின் அடிப்படையில் வீட்டுமனை இல்லா மக்களுக்கு இலவசமாக ஒப்படை செய்தது அரசு. இதேபோல் பழங்குடி, ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட ஒப்படைகளும், இன்னும் UDR பட்டாவிலும், FMBயிலும் கிராம படங்களிலும் பல கிராமங்ளில் ஏறாமலேயே இருக்கிறது.
நகர உச்சவரம்பு சட்டத்தில் தெரியாமல் வாங்கியவர் (INNOCENT BUYER) நிலங்களை வரன்முறை படுத்தி சட்டமியற்றி் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் வரன்முறை படுத்துதல் முடியாமல் இருக்கின்ற நிலைதான் தொடர்கிறது.
ஜமீன் சொத்து நிலங்கள், பஞ்சம நிலங்கள், பூதான நிலங்கள், ஆதிதிராவிடர் ஒப்படை நிலங்கள் கண்டிசன் பட்டா நிலங்களை மீட்க பலவித சட்ட போராட்டங்களை சம்மந்தபட்டவர்கள் நடத்தி கொண்டு இருக்கின்றனர்.
அவைகள் எல்லாம் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை.
ஜன்ம நிலங்கள் ,இரு மாநில எல்லையோர நிலங்கள் போன்றவற்றில் இன்னும் சர்வேக்களே முடியாமல் இருக்கின்றன. மேலும் போலி ஆவணங்கள், போலி பத்திரங்கள்,ஆள்மாறட்டங்கள் அது சம்மந்தப்பட்ட வழக்குகள் என பல நிலங்கள் சிக்கல்ளில் இருக்கின்றன.
விவசாய நிலங்களில் சர்வே பிழைகள் ஏக்கருக்கு 5சென்ட் கூடுதலோ, குறைவோ, என்கிறார்கள்.
(0.1 m.m.என்பதே வெர்னியர் அளவுகோல் பிழை என்று அறிவியல் பாடத்தில் கேள்விபட்டு இருக்கிறோம்.) 5 சென்ட்என்பது 5X437 =2185 சதுர அடி ஆகும்.இவை நவீன உபகரணங்கள் சாட்டிலைட் உதவிகள் புதிய தொழில்நுட்பங்கள் இல்லாதபோது நடந்த சர்வேயின் போது இருக்கும் சர்வே பிழைகள் ஆகும்.
வருவாய்த்துறை ஆவணங்கள்தான் அனைத்து துறைகளுக்கும் அடிப்படை ஆவணங்கள் ஆகும். இவை தப்பும் தவறுமாக இருந்தால் இதன் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் அனைத்து பத்திரப்பதிவுதுறை, அங்கீகாரத்துறை, விவசாய துறை ஆவணங்களும் தப்பும் தவறுமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அரிசியில் இருந்து கற்களையும், அழுக்குகளையும் பொறுக்கி எடுக்காமல் அப்படியே உலையில் போடுவது எவ்வளவு ஆபத்தோ அதேபோல் வருவாய்துறை ஆவணகளில் இருக்கும் சிக்கல்களை களையாமல் கம்ப்யூட்டர்ரில் இருந்து ஆன்லைன் ஆக்குவது அடித்தட்டு நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும். அடுத்த தலைமுறையினர் பிழையாக ஆவணங்களையே சரி என்று ஏற்று கொள்ள கூடிய கட்டாயத்திற்கு வந்து விடுவர்.
இவ்வாறு இருக்கும் பல்வேறு சிக்கல்களை சரிபடுத்தாமல் மேனுவல் கம்ப்யூட்ட்ரில் இருந்து ஆன்லைக்கு மாற்றுவது என்பது புதிய மொந்தையில் பழைய கள் என்றே கருதப்படும். மேலும் தற்போது பத்திரபதிவு துறை பத்திரபதிவுகளை ஆன்லைன் முறைக்கு மாற்றுவதால் மேற்படி வருவாய்துறை ஆன்லைன் ஆவணங்களில் இருக்கின்ற தவறுகளை பதிவு துறையும் அங்கீகரிக்கின்ற சிக்கல்களை உருவாக்கும்.
எனவேதான் தமிழகம் முழுதும் நிலவரிதிட்ட சர்வே செய்யப்படவேண்டும்.
தமிழகம் முழுவதும் புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்வதால் உண்டாகும் நன்மைகள் :
இப்போதைக்கு இருக்கும் நவீன தொழில் நுட்பங்கள், சாட்டிலைட் உதவிகள் மூலம் நிலவரிதிட்ட சர்வே செய்வதால் மிகவும் துல்லியமான அளவுகளாக நிலங்கள் இருக்கும். பழைய நிலவரிதிட்டசர்வேயில் ஏக்கருக்கு 5 சென்ட் கூட குறைய இருக்கும் என்ற நிலையில் புதிய சர்வே ஏக்கருக்கு 1செண்ட்டுக்கு கீழே தான். சர்வே பிழை இருக்கும் இதனால் சில நூறு ஏக்கர் நிலங்கள் மிச்சமாகும்.
புதிய கிராம படங்கள், புதிய புல வரைபடங்கள், துல்லியமாக உருவாக்கப்படுவதால், பத்திரபதிவு துறை, அங்கீகார துறை ஆன்லைன் ஆகி கொண்டு இருப்பதால் புதிய குழப்பங்கள் வராமல் சீராக ஆன்லைன் மூலம் அரசு எந்திரம் வேகமாக செயல்பட ஆரம்பிக்கும்.
வருவாய் துறையின் குளறுபடிகளால் பொதுமக்கள் அடையும் பாதிப்புகள் 95% குறைந்து விடும். தற்போதைய நில உரிமையாளர்கள் யார்? பட்டா பெயர் மாறுதல், தவறுதல்கள், திருத்தங்கள் களையப்பட்ட்டு விடும். இதனால் ஏற்கனவே UDR திருத்தம், பட்டா திருத்ததிற்கு அளிக்கப்பட்ட மனுக்கள் தீர்வை நோக்கி நகரும்.
அரசின் நிதி உதவிகள், மானியங்கள், சரியான நபருக்கு கிடைக்கும்.சர்வே சம்பந்தபட்டவேலிதகறாருக்கான களப்பணி எளிமையாகி விடும் என்பதால், பெரிய அளவில் மக்களுக்கும் அரசு அலுவலகத்திற்கும் அலைச்சலும், காலதாமதங்களும் இருக்காது.
குறைகள் களையப்பட்ட புதிய சர்வே ஆன்லைன் இல் ஏறற்படும்போது மக்கள் அனைவரும் தங்களுடைய பட்டா பெயர் மாற்ற கோரிக்கைகளை இணைய மூலமே மனு செய்து சீக்கரமே இணைய வழியே பட்டா பெயர்மாற்றங்கள் பெற்றுகொள்ளும் சூழல் உருவாகிவிடும்.
CORE BANKING போல எங்க வேண்டுமானலும் இருந்து கொண்டு பட்டா பெயர் மாற்றங்கள் செய்யகூடிய வாய்ப்புகள் உருவாகும்.
இதனால் பல கோடி ரூபாய்கள், லஞ்சங்கள், கையூட்டுளாக செலவழிப்பது போன்ற மக்கள் பணம் மிச்சமாகும்.
சொந்த நிலங்களை விட்டு விட்டு வெளிநாடுகளில், வெளியூர்களில் இருப்பவர்கள் தங்களுடைய ஆவணங்களை இணையத்தில் பார்த்துவிடுவதால் ஆவண மாறுதல்களை அடிக்கடி பார்வையிட்டு தவறுகள் நடந்தால் உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள்.இதனால் NRI சொத்துகளின் ஆவணங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்யுபோது, வழக்குகள், பிரச்சனைகள், அரசு விதிகளுக்கு உட்படாத நிலங்களை தற்காலிகமாக LOCK (லாக்) செய்து விட்டு, நன்முறையில் இருக்கின்ற நிலங்களை சர்வே செய்து புதிய எண்களை கொடுத்துவிட்டால் உண்மையாகவே தமிழகத்தில் தூய்மையான நிலங்கள் எத்தனை சதவீதம் என்று தெரிந்து விடும்.
லாக் செய்யப்பட்ட சர்வேகளில் உள்ள அரசு விதி மீறல்கள் போலி ஆவணங்கள், நில மோசடிகள் RDO நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடத்தி உண்மை உரிமையாளர்களை ஆவணப்படுத்தலாம்.புதிய சர்வே கு பிறகு போலி நில ஆவங்கள் மோசடியில் பெருமளவு குறையும்.
தொழில் செய்யும் நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள், தனவந்தர்கள் பெரிய அளவில் நிலங்கள் வாங்கும் போழுது லாக் செய்யப்பட்டு இருக்கும் நிலங்களை தவிர்த்து பிற நிலங்களை வாங்க விரும்புவர்.
பழைய சர்வே செய்யும்போது DC நிலங்கள், பஞ்சம நிலங்கள் பூதான நிலங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வும் அறிவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே போதுமானதாக இல்லை. 5 சென்ட் வீட்டுமனையை அளந்தாலும் நிலத்தை சுற்றி உள்ளவர்களின் அனைவரையும் நிற்க வைத்து அவர்கள் முன்தான் சர்வே செய்து ஆவணங்களில் குறிப்பிடுவர்.
ஆனால்1985 ல் தமிழகம் முழுக்க சர்வே செய்த போது ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களின் கருத்தை பெறாமல் UDRல் பொதுநிலங்களாக வகைப்படுத்தி பதிவு செய்துவிட்டு விட்டனர். எனவே இப்பொழுது அனைத்து மக்களையும் உள்ளடக்கி நிலங்களை மீண்டும் சர்வே செய்யும் போது நிலத்திற்கும் சமூக நீதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும்.
புதிதாக சர்வே செய்யும் போதே அங்கீகார துறையுடன் ஒருங்கிணைந்து தமிழகம் முழுதிற்குமான மாஸ்டர் பிளான் தயாரிக்கலாம்.
எது கீரின் ZONE, எது பிளான் ZONE, yellow ZONE தாம் பிரிக்கலாம். பதிவு துறையும் களநிலத்திற்கு ஏற்றவாறு வழிக்காட்டி மதிப்புகளை சர்வே செய்யும் நிலங்களுக்கு வைக்கலாம்.
எனவே இவ்வளவு பயன்தரும் செயலை அரசை செய்விக்க இக்கருத்துகளை பொதுமக்களிடம் பரப்புதலும் அதன்மூலம் விழிப்பும் பெற வைக்க வேண்டும்.
குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !
உங்கள் ஊர்களில் மனைகள்நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

சைட்டை பார்வையிடுவதும்,ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பது போன்ற

சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.
இப்படிக்கு
சொத்து ஆவண பிழை தீர்வு மையம்
தொடர்புக்கு: +91-9789886338 

கருத்துகள்



  1. ஐயா எனது அப்பாவும் பெரியப்பாவும் பாகப்பிரிவினை பத்திரம் 1987 ல் எழுதி இருக்கிறார்கள்
    பெரியப்பா சர்வே எண் சரியாகவும் எனது அப்பாவுக்கு தவறாகவும் எழுதி உள்ளார் அவரிடம் கேட்ட போது அவர் காலதாமதம் கடத்திவிட்டு இப்போது அவர்
    இறந்துவிட்டார் அவரது மகனும் திருத்தம் எழுதி கொடுக்க முடியாது பிரச்சினை செய்கிறார் இப்போது என்ன செய்வது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும்